சென்னை: சொத்து தகராறில் போலீஸ் அதிகாரியின் மகளை லாரி ஏற்றி கொலை செய்ததாக சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் மற்றும் அவரது மகன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை சவுகார்பேட்டை, திருபள்ளி தெருவை சேர்ந்தவர் துளசிங்கம் (52). வடக்கு கடற்கரை காவல் நிலைய சிறப்பு எஸ்ஐ. இவரது 2வது மகள் ரம்யா (28). நுங்கம்பாக்கத்தில் உள்ள பியூட்டி பார்லரில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து ரம்யா மொபட்டில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். சென்ட்ரல் அருகே வந்தபோது திடீரென அவ்வழியாக வந்த மினி லாரி இவரது மொபட் மீது பயங்கரமாக மோதியது. இதில், மொபட்டுடன் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ரம்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவலறிந்து, யானைக்கவுனி போக்குவரத்து புலனாய்வு போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரம்யா சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.