சென்னை: தமிழ்நாடு மின்வாரியத்தில் நிதி மற்றும் மின்உற்பத்தி பிரிவுக்கு புதிய இயக்குனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக மின்வாரியத்தில், மின்உற்பத்தி மற்றும் பகிர்மானம், நிதி, கொள்முதல் என பல்வேறு பிரிவுகள் உள்ளன. இதில் நிதி பிரிவு இயக்குனராக இருந்த மனோகரன் மற்றும் மின் உற்பத்தி பிரிவு இயக்குனர் வேல்முருகன் ஆகியோர் ஓய்வு பெற்றுவிட்டனர். இதனால் அந்த 2 பணியிடங்கள் காலியாக இருந்தது. இந்நிலையில், மேற்கண்ட 2 பிரிவுகளுக்கும் புதிய இயக்குனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு எரிசக்தி துறை முதன்மை செயலாளர் நசிமுதீன் பிறப்பித்துள்ள உத்தரவு வருமாறு: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைமை நிதி கட்டுப்பாட்டாளர் கே.சுந்தரவதனம், மின்வாரிய நிதி இயக்குனராகவும், ஈரோடு மாவட்ட மின்உற்பத்தி பிரிவு தலைமை பொறியாளர் எம்.சந்திரசேகரன், மின் உற்பத்தி பிரிவு இயக்குனராகவும் நியமிக்கப்படுகின்றனர். இவ்வாறு கூறியுள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இயக்குனர்கள் இன்று பொறுப்பேற்பார்கள்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி