சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகில் சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஈடுபட்ட சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜசேகரன் உள்ளிட்ட 40 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இதையடுத்து, எழும்பூர் 13வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அனைவருக்கும் சம்மன் அனுபியிருந்தது. அதை தொடர்ந்து சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியை சேர்ந்த மாவட்ட தலைவர் ராஜசேகரன் உள்ளிட்டோர் நீதிபதி கோபிநாத் முன்பு ஆஜராகினர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 40 நபர்களில் ஒரு சிலர் ஆஜராகாத காரணத்தால், வழக்கை வரும் 10ம் தேதிக்கு ஒத்தி வைத்து, அன்றைய தினம் அனைவரும் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.