நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. தலைமையகத்தில், 73வது பொதுக்குழு கூட்டம் இன்று தொடங்க உள்ளது. இதில் இந்தியாவின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கலந்து கொள்கிறார். நேற்று பல்வேறு நாட்டு தலைவர்களின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு இடையே, ஐ.நாவிற்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே, சுஷ்மா சுவராஜை வரவேற்று கட்டித் தழுவினார். மேலும், அவரை அதிபர் டிரம்பிற்கு அறிமுகம் செய்து வைத்தார். இதையடுத்து அவரிடம் பேசிய சுஷ்மா, பிரதமர் மோடியிடம் இருந்து அதிபர் டிரம்பிற்கு வாழ்த்துக்களை பெற்று வந்ததாக தெரிவித்தார். இதற்கு பதிலளித்த டிரம்ப், “நான் இந்தியாவை மிகவும் நேசிக்கிறேன். என்னுடைய அன்பை என்னுடைய நண்பர் பிரதமர் மோடிக்கு தெரிவியுங்கள்” என்று தெரிவித்தார். பல்வேறு நாட்டு தலைவர்களுடன் சுஷ்மா சுவராஜ் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.