பெரம்பூர்: மாதவரத்தில் அரசு தொழிற்பேட்டை உள்ள தனியார் தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் அந்தப்பகுதியில் தேங்கி நின்றது. இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். இதுகுறித்து, பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் அளித்தனர். அதன்பேரில், அந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், கொடுங்கையூர் கண்ணதாசன் நகரில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டு, கடந்த ஆண்டு இதற்காக குழாய் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. இந்த பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியை சேர்ந்த மக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தடைகோரி வழக்கு தொடர்ந்தனர்.