இன்ஜினியர்கள் வீடுகளில் 57 சவரன், பணம் கொள்ளை

சென்னை: மாங்காடு, பழைய வண்ணாரப்பேட்டையில் இன்ஜினியர்கள் வீடுகளின் பூட்டை உடைத்து 57 சவரன், பணத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு அடுத்த  பாலாஜி  அவென்யு அம்பாள் நகர் 1வது தெருவை ேசர்ந்தவர் ரமேஷ் (42). இன்ஜினியர். கடந்த 13ம் தேதி ரமேஷ் தனது குடும்பத்துடன் சொந்த ஊரான திருவண்ணாமலை சென்றிருந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு திரும்பினார்.  அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு  அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 32 சவரன் மற்றும் ஒன்றரை லட்சம் ரொக்கம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.  இதுகுறித்து, மாங்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மாங்காடு அடுத்த கோவூர் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (35). இன்ஜினியர். கடந்த வெள்ளிக்கிழமை விடுமுறையை முன்னிட்டு குடும்பத்துடன் தனது சொந்த ஊரான விழுப்புரம் சென்றுவிட்டு, நேற்று  வீட்டுக்கு திரும்பினார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 13 சவரன் நகைகள், 50 ஆயிரம் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து மாங்காடு  போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 பழைய வண்ணாரப்பேட்டை, பாலசுப்பிரமணிய தெருவை சேர்ந்தவர் சலீம் (38). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் மாலை தனது குடும்பத்துடன் மெரினா கடற்கரைக்கு சென்றுவிட்டு, இரவு 10 மணியளவில் வீடு  திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பீரோவில் இருந்த 12 சவரன் நகை, மெக்கா பயணத்துக்காக உண்டியலில்  சேகரித்த 15 ஆயிரம் மற்றும் 7 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது சலீமுக்கு தெரியவந்தது. இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: