திருமலை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நேற்று மாலை குடும்பத்தினருடன் திருமலைக்கு வந்தார். இரவு 7 மணிக்கு வராக சுவாமி கோயிலிலும், ஹயக்ரீவர் கோயிலிலும் எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம் செய்தார். இரவு திருமலையில் தங்கிய அவர், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று அதிகாலையில் நடைபெறும் வாராந்திர சேவையான அஷ்டதள பாத பத்ம ஆராதனை சேவையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்ய உள்ளார். இதற்கிடையே, விருந்தினர் மாளிகையில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும் தங்கியிருப்பதை அறிந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவருடைய அறைக்கு சென்று சந்தித்து பேசினார்.