மும்பை: மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் நடந்த கணபதி சிலை கரைப்பு நிகழ்ச்சிகளின்போது 18 பேர் நீரில் மூழ்கி இறந்ததாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த செப்டம்பர் 13ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மக்கள் வீடுகளிலும் கோயில்களிலும் மற்றும் மண்டல்களிலும் கணபதி சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். பதினோறாவது நாளான ஆனந்த் சதுர்தஷியை முன்னிட்டு மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் ஆயிரக்கணக்கான சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடல், ஆறு, ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.
இந்த சம்பவங்களின்போது 18 பேர் நீரில் மூழ்கி பலியானார்கள். ராய்கட், ஜல்னா மற்றும் புனே (ரூரல்) மாவட்டங்களில் தலா 3 பேரும், சத்தாரா மற்றும் பண்டாரா மாவட்டங்களில் தலா 2 பேரும் பலியானார்கள். பிம்ப்ரி-சிஞ்ச்வட் (புனே புறநகர் பகுதி), புல்தானா, நாண்டெட் மற்றும் அகமதுநகர் ஆகிய இடங்களில் தலா ஒருவர் பலியானதாக மகாராஷ்டிரா போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் உள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது தவிர மும்பையில் உள்ள காஞ்சூர் மார்க் பகுதியில் ஒருவர் ஏரியில் மூழ்கி இறந்தததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நேற்று காலையில் தென் மும்பை, கிர்காம் சவுபாத்தி அருகே சிலை கரைப்பு சம்பவம் நடந்தபோது அரபிக் கடலில் படகு ஒன்று கவிழந்தது. அதில் இருந்த 5 மீட்கப்பட்டதாக தீயணைப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் ஞாயிற்றுக்கிழமை காலையில் பக்தர்கள் கணபதி சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று ஆறுகள், ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் கரைத்தனர். மும்பை, புனே போன்ற நகரங்களில் பெரிய பெரிய விநாயகர் சிலைகள் அலங்கரிக்கப்பட்ட ஊர்திகளில் எடுத்துச் ெசல்லப்பட்டன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் உடன் சென்றனர். நள்ளிரவு நேரம் வரை ஊர்வலம் நீடித்தது. நீர்நிலைகள் அசுத்தமாவதை தடுக்கும் வகையில் பல மாநகராட்சிகள் கணபதி சிலை கரைப்புக்காக செயற்கை குளங்களை அமைத்து இருந்தன.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி