கோவை: கோவை மாநகராட்சி பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மாநகராட்சி சார்பில் மீண்டும் வாடகை சைக்கிள் திட்டம் தொடங்கப்படுகிறது. இதற்கு பெங்களூரை சேர்ந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கோவை நகரில், சுற்றுச்சூழல் மாசுவை கட்டுப்படுத்துவதற்கும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் ‘ஓபோ’ என்ற நிறுவனத்தினர், மாநகராட்சியுடன் இணைந்து வாடகைக்கு சைக்கிள் வழங்கும் திட்டத்தை கடந்த மார்ச் மாதம் துவக்கினர். முதல் கட்டமாக ஆயிரம் சைக்கிள் இதில் பயன்படுத்தப்பட்டது. ஆனால், இந்த திட்டத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காத காரணத்தால், அந்த நிறுவனத்தினர் இத்திட்டத்தை தொடரவில்லை. இதை தொடர்ந்து, ‘மொபிசி’ என்ற வெளிநாட்டு நிறுவனத்தினர் வாடகை சைக்கிள் திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சியால் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், பல்வேறு காரணங்களால் மொபிசி நிறுவனத்தினர் மாநகராட்சியுடன் செய்த ஒப்பந்தத்தை ரத்து செய்தனர். அதை தொடர்ந்து, தற்போது மூன்றவதாக பெங்களூரை சேர்ந்த ‘மெட்ரோ பைக்கர்ஸ்’ என்ற நிறுவனத்தினர் இத்திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சியால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிறுவனத்தினர் முதற்கட்டமாக இந்த திட்டத்தை சோதனை அடிப்படையில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர். சைக்கிள்களை வாடகைக்கு பெற, முந்தைய நடைமுறைகளையே இவர்களும் பின்பற்றுவர். சைக்கிள் வாடகைக்கு எடுக்கும் போது, சம்பந்தப்பட்ட நபரின் பெயர், செல்போன் எண் உள்ளிட்ட விபரங்கள் சேகரிக்கப்படும். வாடகைக்கு சைக்கிள் எடுத்துக் கொண்டு குறிப்பிட்ட நேரத்திற்கு எந்த பகுதிக்கு வேண்டுமானாலும் செல்லலாம்.