சென்னை: ஸ்டெர்லைட் ஆலை திறப்பது குறித்து மத்திய குழு சென்னையில் நேற்று மக்களிடம் கருத்து கேட்டது. ஆலை ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துகுடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 100வது நாள் நடந்த போராட்டத்தில் 13 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். இதையடுத்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை அதிரடியாக மூடியது. இதனைதொடர்ந்து வேதாந்தா நிறுவனம், டெல்லியில் உள்ள மத்திய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கோரி வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த தீர்ப்பாயம், ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை விஞ்ஞானி சதீஷ், சி.கர்கோட்டி, மத்திய மாசு கட்டுபாடு வாரிய விஞ்ஞானி வரலட்சுமி ஆகியோர் கொண்ட குழுவை நியமித்து, விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதன்படி 3 பேர் கொண்ட குழு கடந்த 22ம் தேதி முதல் ஸ்டெர்லைட் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள மக்களிடம் விசாரணை நடத்தி மனுக்களை பெற்றனர். இதனைதொடர்ந்து மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள பசுமைதீர்ப்பாயத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் வேதாந்தா நிறுவனத்தின் வழக்கறிஞர் குழு மற்றும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அர்ஜுனன், பேராசிரியை பாத்திமா ஆகியோரும். ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக விவசாயிகள், ஸ்டெர்லைட் ஊழியர்கள், காண்ட்ராக்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அப்போது, மத்திய குழுவிடம் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் வக்கீல் பி.எஸ்.ராமன் வாதிடுகையில், ஸ்டெர்லைட் ஆலையால் அப்பகுதி மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை, அங்கு கொட்டப்படும் காப்பர் கழிவுகள், ஜிப்பசம் கழிவுகள், நச்சுத்தன்மை வாய்ந்ததில்லை. அவற்றை எந்த நிலத்திலும் கொட்டலாம்.ஸ்டெர்லைட் ஆலையால் வருமானம் ஈட்டி வந்த மக்கள் தற்போது மிகவும் பின் தங்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.