சென்னை: கருணாசின் சர்சை பேச்சுகளின் பின்னணி என்ன என்பது குறித்து முழுமையாக விசாரிக்க 7 நாள் போலீஸ் காவல் கேட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.முக்குலத்தோர் புலிப்படை சார்பில் கடந்த 16ம் தேதி நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் நடிகர் கருணாஸ் கலந்து கொண்டு, தமிழக முதல்வர் ஆட்சியில் இருப்பது என்னால் தான், அவர் எனக்கு பயப்படுகிறார் என்று மிரட்டும் தொனியில் பேசியிருந்தார். மேலும் காவல்துறை அதிகாரிகளுக்கும் சாவல் விட்டு பேசியிருந்தார். இந்த சர்ச்சையான பேச்சுகள் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கருணாஸை கைது செய்யவும் பலர் கோரிக்கை வைத்தனர். இதனால் நுங்கம்பாக்கம் போலீசார், கருணாஸ் பேசிய வீடியோ பதிவை வைத்து அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் கைது செய்ய தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்நிலையில் நுங்கம்பாக்கம் போலீசார் நேற்றுமுன்தினம் கருணாஸ் வீடு அமைந்துள்ள சாலிகிராமத்திற்கு சென்று அவரை அதிரடியாக கைது செய்து நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.