சர்கார் படத்திலிருந்து ஒரு பாடல் வெளியானது: சமூக வலைத்தளத்தில் டிரெண்டிங்

சென்னை: ‘சர்கார்’ படத்திலிருந்து ஒரு பாடல் நேற்று மாலை வெளியிடப்பட்டது. இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் ஆனது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் படம் ‘சர்கார்’. பிரமாண்டமாக உருவாகும் இந்த படத்தை சன் நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் தயாரிக்கிறார்.  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, யோகி பாபு, ராதாரவி உள்பட பலர் நடிக்கின்றனர்.  படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.

இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் வரும் அக்டோபர் 2ம் தேதி நடைபெறுகிறது. ஒரு பாடல் மட்டும் நேற்று வெளியிடப்படும் என  அறிவிக்கப்பட்டது. அதன்படி, ரஹ்மான் இசையில் விவேக் எழுதிய ‘சிம்டாங்காரன்’ என தொடங்கும் பாடல் நேற்று மாலை வெளியானது. ‘சிம்டாங்காரன் சில்பினுக்க போறேன்...  பக்ல்ல போடேன்... விருந்து வைக்கப்போறேன்...’ என துள்ளலான மெட்டுடன் உருவாகியுள்ள இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இந்த பாடல் குறித்து டிவிட்டரில் பாடலாசிரியர் விவேக் கூறும்போது, ‘சிம்டாங்காரன் என்பது சென்னை தமிழ் சொல். அதற்கு கவர்ந்து இழுப்பவன், பயமற்றவன்,  துடுக்கானவன் என்பது பொருள். கண் சிமிட்டாமல் சிலரை பார்க்க தோன்றும். அந்த ஒருவனே சிம்டாங்காரன்’ என தெரிவித்துள்ளார். சர்கார் படத்தின் முதல் பாடல் வெளியான உற்சாகத்தில் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இந்த பாடலை புகழ்ந்து கருத்துகளை பதிவிட்டனர். பாடலை கேட்க  ஆவலுடன் காத்திருந்த ரசிகர்கள் யூ டியூப்பில் பாடல் வரிகளுடன் வெளியான பாடலை கேட்டு ரசித்தனர். இந்த பாடல் இணையதளத்தில் நேற்று டிரெண்டிங் ஆக  மாறியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: