சென்னை: சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது தொடர்பாக, அனைத்து எம்எல்ஏக்களுக்கும் சபாநாயகர் தனபால் கடிதம் அனுப்பியுள்ளார். முக்குலத்தோர் புலிப்படை சார்பில் கடந்த 16ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், கலந்து கொண்டு பேசிய அந்த அமைப்பின் தலைவரும், திருவாடனை சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.நகர் துணை கமிஷனர் அரவிந்தன் ஆகியோரை சர்ச்சைக்குரிய வகையில் மிரட்டும் தொனியில் அவதூறாக பேசினார். இதையடுத்து, கருணாஸ் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, நேற்றுமுன்தினம் அதிகாலையில் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் கருணாசை போலீசார் கைது செய்தனர்.