நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களுக்கு கண்டிப்பாக கருணை காட்டக்கூடாது: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு எந்த சூழ்நிலையிலும் கருணை காட்டக் கூடாது என்று உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தாலுகா இருப்பாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன், தனது குடும்பச் சொத்து பாகப்பிரிவினை செய்தபோது கிடைத்த நிலத்திற்கு தனது பெயரில் பட்டா வழங்க கோரி மேட்டுப்பாளையம் தாசில்தாரிடம் விண்ணப்பித்துள்ளார். ஆனால் அந்த நிலம் அரசு புறம்போக்கு நிலம் எனக்கூறி பட்டா வழங்க தாசில்தார் மறுத்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து லட்சுமணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த தீர்ப்பு வருமாறு: மனுதாரர் இந்த நிலம் தங்களது மூதாதையர்களின் நிலம். கடந்த 1931 முதல் தங்களின் பயன்பாட்டில் உள்ளது என்று கூறியுள்ளார். ஆனால், மேட்டுப்பாளையம் தாசில்தார், மனுதாரர் கூறும் நிலம் கரடு-புறம்போக்கு நிலமாகும். இந்த நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். சம்பந்தப்பட்ட  நிலத்தை கோவை மாவட்ட வருவாய் அதிகாரி ஆய்வு செய்து சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

   சமீபகாலமாக அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுகின்றன. குறிப்பாக நீர் நிலைகள், நீர் ஆதாரங்கள், புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்மந்தப்பட்ட மாவட்டக் கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர் நிலைகள் உள்ளிட்ட அரசு நிலங்களின் ஆக்கிரமிப்பை அகற்றுவதில் எந்த நிலையிலும் கருணை காட்டக் கூடாது. அவ்வாறு ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகள் மீது சிவில் சர்வீஸ் விதிகளின் கீழ் அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  பட்டாக்கள் வழங்கும் முன், வருவாய் ஆவணங்களை முறையாக சரிபார்த்து வழங்க வேண்டும். அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்து அவற்றை அப்புறப்படுத்துவதற்கு மாவட்ட ஆட்சியர் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அரசு நிலத்திற்கு  பட்டா பதிவு செய்து கொடுத்த அதிகாரிகளுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அரசு நிலங்கள் மக்கள் நலனுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த உத்தரவை அரசு கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: