×

அண்ணா நூற்றாண்டு நூலகம்!

ஆசியாவின் மிகப் பெரிய நூலகங்களில் முதன்மையானதாக உள்ளது சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம். 3.75 லட்சம் சதுர அடி பரப்பில் அமைந்துள்ள நூலகம் தரைத்தளம் நீங்கலாக 8 தளங்களைக் கொண்டது. தற்சமயம் பல்வேறு துறை சார்ந்த பல லட்சம் புத்தகங்களைத் தன்னகத்தேகொண்டு இந்நூலகம் இயங்குகிறது. இது தேசிய மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு அருகே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். நூலகத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக “உலக இணைய மின் நூலகத்துடன்” (World Digital Library) இணைக்கப்பட்டுள்ளது. யுனெஸ்கோவின் உலக இணைய மின் நூலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியால் 2008 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 16ஆம் நாள் அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கப்பட்டு, 2010ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி அவராலேயே திறந்து வைக்கப்பட்டது. நூல்கள் மற்றும் கற்பதில் அண்ணா கொண்ட பற்று மற்றும் தீராத ஆர்வத்தை மரியாதை செய்யும் பொருட்டும், அவரது நூற்றாண்டை நினைவுறுத்தும் விதமாகவும் “அண்ணா நூற்றாண்டு நூலகம்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. நூலகத்தின் நுழைவுவாயிலில் அமைந்துள்ள அண்ணா சிலையில் அவர் சொன்ன பொன்மொழி பொறிக்கப்பட்டுள்ளது. அது, ‘வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தகச்சாலைக்கு தரப்பட வேண்டும்.’

நூலக அமைப்பு

அண்ணா நூற்றாண்டு நூலகம் ஒன்பது தளங்களுடன் பிரம்மாண்டமாக செயல்படுகிறது. ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் என்ற பெருமையுடன் தமிழகத்திற்கு அழகு சேர்க்கிறது. மேலும் இந்நூலகம் சர்வதேச தரத்துடன் அமைந்துள்ளதால் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து அனைத்துத் தரப்பு மக்களும் வருகை தருகிறார்கள். இந்நூலகத்தின் ஒவ்வொரு தளமும் தனிச்சிறப்புடன் விளங்குகிறது.

சொந்த நூல்கள் பயன்படுத்தும் பிரிவு


பயனாளர்கள் தங்கள் சொந்த நூல்கள் மற்றும் மடிக்கணினிகளைக் கொண்டு வந்து படிப்பதற்கான தனிப் பிரிவு உள்ளது. உரிய அனுமதியுடன் வாசகர்கள் தங்கள் புத்தகங்களைக் குறிப்பிட்ட பகுதிக்குள் பயன்படுத்தலாம்.

மெய்ப்புல அறைகூவலர் (பார்வையற்றோர்) பிரிவு

மெய்ப்புல அறைகூவலர் பிரிவில் பார்வையற்றோர்களுக்காகச் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இப்பிரிவில் பார்வையற்றவர்கள் தங்களின் கல்வி தாகத்தைப் போக்கிக்கொள்ளலாம். இப்பிரிவில் 500க்கும் மேற்பட்ட பிரைய்லி புத்தகங்களும், 400க்கும் மேற்பட்ட குறுந்தகடுகளும் உள்ளன.

நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்கள் பிரிவு


நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்கள் பிரிவில் தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கில் பல நாளிதழ்களும், பருவ இதழ்களும் உள்ளன. கல்வி, கலை, இலக்கியம், பண்பாடு, அறிவியல், தொழில்நுட்பம், விளையாட்டு, சமயம், மருத்துவம் மற்றும் பொழுதுபோக்கு சம்பந்தமான பருவ இதழ்களும் உள்ளன. கூடுதலாக பழைய நாளிதழ்களும், பருவ இதழ்களும் பாதுகாக்கப்பட்டுவருகின்றன.

குழந்தைகள் பிரிவு

முதல் தளத்தில் 15,000 சதுர அடி பரப்பில் குழந்தைகளுக்கென்று உருவாக்கப்பட்ட நூற்பிரிவு அமைந்துள்ளது. இப்பிரிவில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மட்டும் அனுமதிக்கப்படுகிறார்கள். குழந்தைகள் கலை நிகழ்ச்சிக்கென்று சிறிய மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. இதில், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை காலை குழந்தைகளுக்கான நிகழ்ச்சி நடத்தப்படும். இங்கு வைக்கப்பட்டுள்ள கணினிகளின் வழியாக குழந்தைகள் நீதிக்கதைகள் கேட்கவும், விரும்பும் விளையாட்டுகளை விளையாடவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழ் நூல்கள் பிரிவு

இரண்டாவது தளத்தில் தமிழ் நூல்கள் அ மற்றும் ஆ என இரண்டு பிரிவுகளாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. ‘அ’ பிரிவில், அண்ணா எழுதிய மற்றும் அண்ணாவைப் பற்றிய நூல்கள், பெரியாரின் நூல்கள், பொது அறிவு நூல்கள், கணினி அறிவியல், கலைக் களஞ்சியம், தொகுப்பு நூல்கள், இதழியல், தத்துவம் மற்றும் உளவியல், சுய முன்னேற்ற நூல்கள், சமய நூல்கள், ஆன்மிகம், சமூகவியல், அரசியல், பொருளியல், சட்டம், வணிகவியல், மொழியியல், நாட்டுப்புறவியல், தமிழ் அகராதி, இலக்கண நூல்கள், அறிவியல், வானியல், கணிதவியல், தொழில் நுட்பவியல், மருத்துவம், பொறியியல், வேளாண்மை, நுண்கலைகள், திரைப்படவியல், விளையாட்டு பற்றிய அனைத்து நூல்களும் உள்ளன.

‘ஆ’ பிரிவில், சங்க இலக்கிய நூல்கள், சிற்றிலக்கியங்கள், கவிதைகள், கதைகள், கட்டுரைகள், சிறு கதைகள், புதினம், நாடகம், பயணக் கட்டுரைகள், கடிதங்கள், நகைச்சுவை நூல்கள், வாழ்க்கை வரலாறு, இலங்கைத் தமிழர் வரலாறு, புவியியல் மற்றும் அரிய நூல்கள் போன்றவை மிகச்சிறந்த முறையில் பகுத்து வைக்கப்பட்டுள்ளன.

ஆங்கில நூல்கள் பிரிவு

மூன்றாவ‌து முத‌ல் ஏழாம் த‌ள‌ம் வரை ஆங்கில‌ நூல்க‌ள் பாட‌வாரியாக‌ ப‌குத்து வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன. பொதுஅறிவு, கணினி அறிவியல், நூலகம் & தகவல் அறிவியல், தத்துவம், உளவியல், அறஇயல் மற்றும் மதம், சமூகவியல், புள்ளியியல், மற்றும் அரசியல் தொடர்பான நூல்கள் உள்ளன. நான்காவது தளத்தில் பொருளியல், சட்டம், பொது நிர்வாகம், கல்வி, வணிகவியல், மொழியியல், மற்றும் இலக்கியம் தொடர்பான நூல்கள் உள்ளன. ஐந்தாவது தளத்தில் பொது அறிவியல், கணிதவியல், வானவியல், இயற்பியல், வேதியியல், புவியமைப்பியல், உயிரியல், மற்றும் மருத்துவம் தொடர்பான நூல்கள் உள்ளன.

ஆறாவது தளத்தில் பொறியியல், வேளாண்மை, உணவியல், மேலாண்மை, கட்டடக்கலை, நுண்கலை, மற்றும் விளையாட்டு தொடர்பான நூல்கள் உள்ளன. ஏழாவது தளத்தில் வரலாறு, புவியியல், வேதியியல், சுற்றுலா & பயண மேலாண்மை மற்றும் வாழ்க்கை வரலாறு தொடர்பான நூல்கள் உள்ளன. மேலும், இ- லைப்ரரி என்ற இணையம் வழியாக தகவல்களைப் படிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. கீழ்த்திசை ஓலைச்சுவடிகள் நூலகம் உள்ளது. எட்டாவது தளத்தில் அலுவலகம் மற்றும் நிர்வாகப் பிரிவு உள்ளது.

சிறப்பு நிகழ்ச்சிகள்

2017 ஏப்ரல் முதல் வாரந்தோறும் சனிக்கிழமையில் ‘பொன்மாலைப் பொழுது’ என்ற நிகழ்ச்சி பல்வேறு துறைகளை மையப்படுத்தி நடத்தப்படுகிறது. அதேபோல் ஞாயிற்றுக்கிழமை தோறும் காலைப் பொழுதுகளில் குழந்தைகளுக்கான கதை சொல்லுதல், ஓவியம் வரைதல், நடனமாடுதல் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

ஞாயிறு மாலையில், இளைஞர்களைப் போட்டித் தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் சிறப்பு நிபுணர்களைக்கொண்டு வகுப்புகள் நடத்தப்படுகிறது. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அறிவை வளர்க்கக்கூடிய பலதரப்பட்ட விஷயங்களை நாம் அறிந்துகொள்ளலாம். நமது ஆராய்ச்சிக்குத் தேவைப்படும் விஷயங்களும் அங்கு கிடைக்கும். நமது மொழி வளத்தைப் பெருக்குவதற்கும் வாசிப்பைச் சரளமாக்குவதற்கும் நூலகமே முக்கிய பங்கை வகிக்கிறது. பயன்படுத்திக் கொள்வோம். நூலக விவரங்களை www.annacentenarylibrary.org என்ற இணையதளத்திலும் பார்க்கலாம்.

- திருவரசு



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Library system, own books, section, real room, newspaper
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...