மண்டல கிராமப்புற வங்கிகளை இணைக்க மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை

புதுடெல்லி: பொதுத்துறை வங்கிகளுடன், மண்டல கிராமப்புற வங்கிகளை இணைப்பது பற்றி, மத்திய அரசு ஆலோசித்து வருகின்றது. பேங்க் ஆப் பரோடா, தேனா வங்கி மற்றும் விஜயா வங்கி ஆகியவற்றை இணைக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக மண்டல கிராம வங்கிகளையும் ஒருங்கிணைக்க முடிவு செய்துள்ளது. இந்த வங்கிகளின் எண்ணிக்கையை, 56லிருந்து, 36 ஆக குறைக்கவும் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தையை மத்திய அரசு துவக்கியுள்ளது. இதன் மூலம் கடன் வசதி அதிகரிக்கும், வாராக்கடன் குறையும், சேவைகள் சிறப்பாக நிகழும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி, மாநில அரசுகளின் உதவியுடன் பல்வேறு கிராம வங்கிகள் செயல்படுவதால், அவற்றை ஒன்றோடு ஒன்று இணைப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

ஆர்ஆர்பி சட்டம் 1976-ன் கீழ் சிறு விவசாயிகள், விவசாயக் கூலிகள், கிராமப்புற கலைஞர்களுக்கு கடன் அளிக்க கிராம வங்கிகள் உருவாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 2015ம் ஆண்டு திருத்தப்பட்ட சட்டத்தில், வங்கிகள் மூலதனத்தை பெருக்கிக் கொள்ள அனுமதிக்கப்பட்டது. இதன் காரணமாக தற்போது, மண்டல கிராம வங்கிகளில் 50 % பங்கை மத்திய அரசும், 35 % ஸ்பான்ஸர் வங்கிகளும், 15 % பங்கினை மாநில அரசும் வைத்துள்ளன. இந்த வங்கிகள் இணைப்பு ஏற்பட்டால் அனைத்து அதிகாரங்களும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் அமைய வாய்ப்பு உள்ளது. மேலும் கடந்த 2005ம் ஆண்டு முதல் மண்டல கிராம வங்கிகள் படிப்படியாக இணைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 2005ம் ஆண்டு 196 வங்கிகள் இருந்த நிலையில் 2006ம் ஆண்டு 136 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல 2012ம் ஆண்டிற்குள் 82ஆகக் குறைக்கப்பட்டு, தற்போது 56 வங்கிகள் உள்ள நிலையில், இதனை 36ஆகக் குறைக்க மத்திய அரசு ஆலோசித்து வருகின்றது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: