மீனம்பாக்கம்: மலேசியாவுக்கு கடத்த இருந்த ₹8 லட்சம் வெளிநாட்டு கரன்சிகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, தஞ்சாவூரை சேர்ந்த நபரை அதிகாரிகள் கைது செய்தனர். சென்னையில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு நேற்று காலை 10.30 மணிக்கு ஏர் ஏசியா விமானம் புறப்பட்ட தயாராக இருந்தது. அதில் செல்ல வந்த பயணிகளின் உடமைகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, தஞ்சாவூரை சேர்ந்த ராஜன் (40) என்பவர் சுற்றுலா விசாவில் மலேசியா செல்ல வந்திருந்தார்.
அவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை தனி அறையில் வைத்து அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, அவர் வைத்திருந்த பையில் துணிகளுக்கு நடுவே கட்டுக்கட்டாக சவுதி ரியால் மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. இதன் இந்திய மதிப்பு ₹8 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து மலேசியா செல்ல இருந்த ராஜன் பயணத்தை ரத்து செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி