பாதுகாப்பு: ஆண்டிபட்டி விவசாயிகள் நடவடிக்கை
ஆண்டிபட்டி: வெங்காயத்திற்கு விலையில்லாததால், அதை வீதியில் கொட்டாமல் பழமையான இயற்கை முறையான `பர்ணை’’ அமைத்து ஆண்டிபட்டி பகுதி விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர்.தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஒன்றியம் விவசாயம் நிறைந்த பகுதியாகும். இங்கு பாலக்கோம்பை, ராமகிருஷ்ணாபுரம், கண்டமனூர், கணேசபுரம், காமாட்சிபுரம் தெப்பம்பட்டி, கதிர்நரசிங்கபுரம், கோவில்பட்டி, கரட்டுப்பட்டி, ராஜதானி, ராஜகோபாலன்பட்டி, குன்னூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.தற்போது ஒரு சில பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட சின்ன வெங்காயம் விளைந்துள்ளது. ஆனால் அதற்கு உரிய விலை கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மேலும் வெங்காயத்தை வீதியில் கொட்டாமல் அதனைப் பழமையான முறைப்படி பாடம் செய்து `பர்ணை’’ அமைத்து பாதுகாத்து வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயி கூறுகையில், ``5 ஏக்கர் பரப்பளவில் வெங்காயம் சாகுபடி செய்துள்ளேன். இதற்கு முறையாக உழவடை பணிகள் செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ.3 லட்சம் செலவாகிறது. தற்போது வெங்காயத்தின் விலை கிலோ ₹15 லிருந்து ₹20க்கு விற்பனையாகிறது. விளைந்த வெங்காயத்தை கை நஷ்டம் ஏற்பட்டாலும் அறுவடை செய்து வருகிறேன். வெங்காயத்தை வீதியில் கொட்ட மனம் இல்லாததால், பர்ணை அமைத்து வெங்காயத்தை பாதுகாத்து வருகிறேன். வெங்காயத்தையும் அரசு நேரடியாக விற்பனை செய்ய முன் வரவேண்டும்,’’ என்று கூறினார்.தமிழக அரசு வெங்காயத்திற்கு ஒரே விலை நிர்ணயம் செய்யுமாறும், அரசே வெங்காயத்தை நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி