பொள்ளாச்சி: பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து ஓரளவு இருந்தாலும் விற்பனை மந்தமடைந்துள்ளது. இதில், ஒருகிலோ மல்லிகை ₹300ஆக குறைந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி தேர்நிலை பூ மார்க்கெட்டுக்கு சுற்றுவட்டார கிராம பகுதிகளிலிருந்து மட்டுமின்றி மடத்துக்குளம், உடுமலை, கணியூர் நிலக்கோட்டை, கரூர், பழனி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், நாமக்கல், மதுரை உள்ளிட்ட பல பகுதியிலிருந்து பூக்கள் அதிகளவில் விற்பனைக்காக கொண்டுவரப்படுகின்றன. இங்கு வரும் பூக்களை உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி, கேரள மாநில பகுதி வியாபாரிகள் மொத்த விலைக்கு வாங்கி செல்கின்றனர். இதில், கடந்த ஆகஸ்ட் மாதம் வரை தொடர்ந்து பருவமழை பெய்ததால், அப்போது பூக்கள் வரத்து மிகவு குறைவாக இருந்தது. இதனால், பூக்கள் கூடுதல் விலைக்குவிற்பனை செய்யப்பட்டது. தற்போது வெயிலின் தாக்கத்தால், இந்த மாதம் துவக்கத்திலிருந்து மீண்டும் பூக்கள் வரத்து அதிகரித்தது. இருப்பினும், அவ்வப்போது சுபமுகூர்த்த நாட்கள் மற்றும் விநாயகர் சதுர்த்தி என தொடர்ந்து இருந்ததால் மல்லிகை மற்றும் முல்லை, ஜாதி முல்லை உள்ளிட்ட பூக்கள் ஒருகிலோ ₹800 முதல் ₹1000 வரை விற்பனை செய்யப்பட்டது.