அதிமுக ஆட்சியில் எம்எல்ஏ கருணாஸுக்கு ஒரு சட்டம் எச்.ராஜா, எஸ்.வி.சேகருக்கு ஒரு சட்டமா?: மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை: “அதிமுக ஆட்சியில் எம்எல்ஏ கருணாஸுக்கு ஒரு சட்டம், எச்.ராஜா, எஸ்.வி.சேகருக்கு ஒரு சட்டமா?” என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:மக்கள் பிரதிநிதிகளின் பேச்சுகள் எந்தச்சூழ்நிலையிலும் வரம்பு மீறும் வகையில் இருக்கக்கூடாது பொது அமைதியையும், நல்லிணக்கத்தையும் நிலை நாட்ட  வேண்டிய பொறுப்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பெருமளவுக்கு இருக்கிறது என்பதிலும்; இரு வேறு  கருத்துகளுக்கு இடமே இல்லை.ஆனால் அதே நேரத்தில், சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், தான் தெரிவித்த கருத்துக்கு வெளிப்படையாக வருத்தம் தெரிவித்த பிறகும், அவரை வேண்டுமென்றே கைது  செய்திருப்பது, தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி, “ஆளுக்கொரு நீதி- வேளைக்கொரு நியாயம்” என்ற நிலையில் தான் அமல்படுத்தப்படுகிறது என்பது  தெளிவாகிறது.தந்தை பெரியார் சிலையை உடைப்பேன் என்றும்,  உயர் நீதிமன்றத்தையும், தமிழ்நாடு காவல் துறையையும் ஒட்டு மொத்தமாக மிகவும் கேவலமாகவும்  தரக்குறைவாகவும்  விமர்சித்ததாலும், இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்களின் இல்லத்தரசிகளைப் பற்றி அநாகரிகமான முறையில்  பேசியதாலும், பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டும், இதுவரை பாஜ தேசியச்  செயலாளர் எச்.ராஜா கைது செய்யப்படவில்லை.

அவர் காவல்துறைக்கே-காவல்துறையைக் கட்டுப்படுத்தும் தமிழக அரசுக்கே சவால் விடும் வகையில் “நான் தலைமறைவாகவில்லை” என்று மேடைதோறும் பேசி,  அதற்கு காவல்துறை அதிகாரிகளே பாதுகாப்பு வழங்கி வருவது என்ன வகையில்  நியாயம் என்று புரியவில்லை. அதேபோல், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து மிகவும்  இழிவான கருத்துகளை வெளியிட்ட எஸ்.வி.சேகரின் முன் ஜாமின் மனு உயர் நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டு, உச்ச நீதிமன்றமே கைது செய்ய தடை விதிக்க மறுத்தும் கூட,  அவரை அதிமுக அரசு கைது செய்யத் தயக்கம் காட்டுவது, என்ன வகை அணுகுமுறை என்றும் விளங்கவில்லை.ஆகவே, கருணாஸுக்கு ஒரு சட்டம், எச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகருக்கு ஒரு சட்டம் என்ற அதிமுக அரசின் பாகுபாடான போக்கு மிகவும் அநீதியானது,  கண்டிக்கத்தக்கது. ஒரு போலீஸ் அதிகாரியை விமர்சித்தது குற்றம் என்றால், ஒட்டுமொத்த காவல்துறையையும், உயர் நீதிமன்றத்தையும் மிக மோசமாக  விமர்சித்த எச்.ராஜாவை கைது செய்யாததை பார்க்கும் போது, எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கிய “கூவத்தூர் மர்மமும் ரகசியமும்” வெளிச்சத்துக்கு  வந்து விடக்கூடாது; தமிழ்மக்களின் ஏச்சையும் பேச்சையும் இதிலாவது தவிர்க்க வேண்டும்; என்ற காரணத்திற்காகவே கருணாஸை கைது செய்திருக்கிறார்கள்  என்றே கருதுகிறேன். உலை வாயை மூடும் அற்ப எண்ணம் இதுவாகும்.

அதிமுக அரசில் சட்டத்தின் ஆட்சி குரங்கு கையில் கிடைத்த பூ மாலை போல், சிதறிச் சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பதைக் கண்டு, பொதுமக்கள் வெட்கித்  தலைகுனிகிறார்கள். எனவே, கைது செய்ய வேண்டியவர்களை, அவர்களுடைய பின்னணியைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், தாமதிக்காமல் கைது செய்ய  வேண்டும். விடுவிக்க வேண்டியவர்களை உடனே விடுவிக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: