சென்னை: கருணாஸை கைது செய்த போலீசார் இப்போதாவது எச்.ராஜா, எஸ்.வி.சேகரை கைது செய்ய வேண்டும் என்று எம்எல்ஏக்கள் தனியரசு, தமிமுன் அன்சாரி கேள்வி எழுப்பியுள்ளனர்.தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு எம்எல்ஏ, மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்எல்ஏ ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்எல்ஏ, தன் கட்சி ஆர்ப்பாட்டத்தில் பேசிய பேச்சு சர்ச்சைக்குரியதாகி, அவரை கைதில் கொண்டு போய் நிறுத்தியிருக்கறது. அவரது பேச்சின் சில பகுதிகள் எந்த விதத்திலும் ஏற்க முடியாதவை. அதைக் கேட்டு நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். வேதனையடைந்தோம்.நாங்கள் கருணாஸை அலைப்பேசியில் தொடர்புக் கொண்டு, உங்கள் கோரிக்கைகளை மட்டும் வலியுறுத்தி பேசிவிட்டு வந்திருக்கலாமே. அது தானே அரசியல் தர்மம் என்றெல்லாம் சுட்டிக்காட்டி, இதற்கு வருத்தம் தெரிவிக்க சொன்னோம். அவர் அதை புரிந்து ஏற்றுக் கொண்டார்.