சென்னை: கட்சியிலும், ஆட்சியிலும் கொல்லைப்புறமாக உள்ளே வந்து, ஊழல் பண மூட்டைகளின் மேல் அமர்ந்துகொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி திமுகவைப் பற்றி விமர்சிக்க துளிகூட தகுதி இல்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஊழல் மூட்டைகள் வரிசை வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கிடங்காகக் கிடக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நான் ஏதோ தினமும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவதாக திருவாய் மலர்ந்திருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கோடி கோடியாய் பல கோடிகளைக் கொட்டிக் கொடுத்த பதவி விரைவில் பறிபோய் விடுமோ என்ற பயத்தில் மத்திய பாஜவுக்கு ‘அடிமைச் சாசனம் எழுதிக்கொடுத்து விட்டு ஆட்சியில் நீடிக்கும் முதல்வர் என் மீது பாய்ந்திருப்பது, அச்சத்தின் விளைவே என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
அதிமுகவின் ஒரு பிரிவை நடத்திக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி சிறிதும் கூச்சமோ, வெட்கமோ இல்லாமல் பேசியிருப்பது - அங்கே நடைபெற்ற அரசு விழா என்கிற தரத்தை அப்படியே சாக்கடையில் இறக்கியிருப்பதற்குச் சமமாகும். திமுக தலைவராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்ட என்னைப் பார்த்து, நூற்றுக்கு நூறு சதவீதம் கொல்லைப்புற வழியாக பதவிக்கு வந்த பழனிசாமி கூக்குரலிடுவது வெந்துகொண்டிருக்கும் பொறாமையே தவிர, பொறுப்புள்ள பொருத்தமான பேச்சு அல்ல. இந்தியாவிலேயே ஊழலுக்காக சிறை சென்ற ஒரே முதல்வரை பெற்ற கட்சி அதிமுகவில் இருந்து முதல்வராகியுள்ள எடப்பாடி பழனிசாமி என்னைப் பார்த்தும், திமுகவைப் பார்த்தும் ஊழல் என்று கடைந்தெடுத்த பொய்யுரை நிகழ்த்துவது அரசு கஜானாவில் அடிக்கும் கொள்ளைப் பணத்தின் தழும்பேறிய ஆணவமே தவிர வேறு ஏதுமில்லை.
அணி வகுத்து வரும் ஊழல் வழக்குகளே அவருக்கு அதை விரைவில் எளிதில் புரிய வைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் எனக்கு இல்லை. ஆகவே, அதிமுகவிற்குள் ஒரு பிரிவை கைப்பற்றி கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வந்த எடப்பாடி பழனிசாமி ஊழல் பற்றியோ, உள்கட்சி ஜனநாயகம் பற்றியோ உரக்கப் பேசாமல் இருப்பது அவருக்கும் நல்லது, அவருடைய பிரிவுக்கும் நல்லது, நாட்டிற்கும் நல்லது என்று தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி