சென்னை; ஒரே விமானத்தில் தங்கம் கடத்தி வந்த 2 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று முந்தினம் இரவு 11.30 மணிக்கு தனியார் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த சென்னை பயணி இப்ராஹீம் (38) மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனால் மலேசியாவில் இருந்து கொண்டு வந்திருந்த சிறிய டேபிள் ஃபேனை தனித்தனியாக பிரித்து பார்த்தனர். அதில் ஒரு தங்க செயினும் தங்க கட்டிகளும் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதன் எடை 350 கிராம். அதன் சர்வதேச மதிப்பு ரூ.10.5 லட்சம். இதையடுத்து சுங்க அதிகாரிகள், அவற்றை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர். இதேபோல், அதே விமானத்தில் வந்த முகமது (40) என்பவர் அனைத்து சோதனைகளும் முடித்தார். பின்னர், அவர் மீண்டும் குடியுரிமை சோதனை நடத்தும் பகுதிக்கே சென்றார். அவரிடம் அதிகாரிகள் கேட்டபோது பாஸ்போர்ட்டை மேல்தளத்தில் வைத்துவிட்டு வந்து விட்டதாகவும் அதை எடுக்கச் செல்வதாகவும் கூறினார். அவரை கண்காணித்த போது முகமது, நேராக கழிவறைக்கு சென்று 5 நிமிடம் கழித்து வெளியில் வந்தார். உடனே முகமதுவிடம் சோதனை நடத்தியபோது அவரிடம் 2 தங்க கட்டிகள் இருந்தன. அதன் மொத்த எடை 400 கிராம். அதன் சர்வதே மதிப்பு ரூ.12 லட்சம். சுங்க அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.