பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்ட மக்கள், சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த நெடியம் புது காலனி பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக குடிநீர் வரவில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தில் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் வயல்வெளியில் தண்ணீர் பிடித்து வந்து பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நெடியம் காலனியை சேர்ந்த பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் பள்ளிப்பட்டு-நகரி சாலை நெடியம் பகுதியில் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஊராட்சி நிர்வாகத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, ‘’குடிநீர் பிரச்னை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் அரை மணி நேரம் பரபரப்பு நிலவியது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி