திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 13ம்தேதி தொடங்கி 21ம்தேதி வரை நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்நிலையில் புரட்டாசி மாதம் வெங்கடேச பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால் இம்மாதம் முழுவதும் பக்தர்கள் அதிகளவில் வருவார்கள். இதற்கிடையில் பிரம்மோற்சவம் முடிந்தது முதல் வெள்ளிக்கிழமை மொகரம் பண்டிகை, மற்றும் சனி, ஞாயிறு என தொடர்ந்து அரசு விடுமுறை என்பதால் பக்தர்களின் வருகை மிகவும் அதிகளவு உள்ளது. நேற்று புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இன்று காலையும் பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகளவில் உள்ளது.