அவதூறாக பேசிய வழக்கில் எம்.எல்.ஏ.கருணாஸுக்கு அக்.5-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

சென்னை: முதல்வர் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசியதாக கைதான எம்.எல்.ஏ.கருணாஸை அக்.5-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். எம்.எல்.ஏ.கருணாஸ் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு நீதிபதி ஆட்சேபனை தெரிவித்தார். நீதிபதி ஆட்சேபனை தெரிவித்ததை அடுத்து கருணாஸ் மீதான கொலை முயற்சி வழக்கை ரத்து செய்ய போலீஸ் முடிவு செய்துள்ளது. சென்னை எழும்பூர் 13-வது நீதிமன்ற நீதிபதி கோபிநாத் இந்த உத்தரவை பிறப்பித்தார். எம்எல்ஏ கருணாஸ் தரப்பில் நாளை காலை 10 மணிக்கு ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படும் என்று வழக்கறிஞர்

ராஜா தெரிவித்தார். மேலும் கருணாஸ் கைது குறித்து சபாநாயகரிடம் தெரிவித்தததாக நீதிபதியிடம் காவல்துறையினர் கூறியதாக அவர் கூறினார்.

முன்னதாக நடிகரும் திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். கடந்த வாரம் வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்ற பொது கூட்டம் ஒன்றில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழக காவல்துறையை நடிகரும், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ-வுமான கருணாஸ் அவதூறாக பேசியிருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வீடியோக்கள் யூ டியூப் மற்றும் பிற பிரபல சமூக வலைதளங்களில் பரவின.

முதல்வர் பழனிசாமி, தன்னை பார்த்து பயப்படுவதாகவும் இந்த அரசு அமைய தான் முக்கிய பங்கு வகித்ததாக கருணாஸ் கூறியிருந்தார். அதோடு மட்டுமல்லாது காவல்துறை அதிகாரியிடமும் யூனிபார்மை கழற்றிவிட்டு வந்து மோத தயாரா என்று சவாலும் விடுத்திருந்தார். இதனையடுத்து பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று அதிகாலை கருணாஸ் கைது செய்யப்பட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: