முசாபர்நகர்: உத்தரபிரதேசத்தில் ஏடிஎம்.மில் நிரப்பப்பட்டிருந்த பணத்தை ரகசிய குறியீட்டை பயன்படுத்தி திருடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தர பிரதேச மாநிலம், சாம்லி மாவட்டம், பந்திகேரா பகுதியில் இந்தியன் ஓவர்சிஸ் வங்கியின் ஏடிஎம் உள்ளது. இதில், கடந்த மார்ச் 4ம் தேதி நிரப்பப்பட்டிருந்த பணம் குறைவாக இருப்பதாக வந்த புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சேத்தன் குமார் என்பவர் ஏடிஎம்மில் நிரப்பப்பட்டிருந்த பணத்தை அதன் ரகசிய குறியீடை பயன்படுத்தி திருடியது தெரியவந்தது. இது தொடர்பாக நேற்று அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், தனக்கு ஏடிஎம்மின் ரகசிய குறியீட்டை வங்கியின் மேலாளர் ராபின் பன்சால் கொடுத்ததாகவும். அதை பயன்படுத்தி வங்கி ஏடிஎம்மில் இருந்து ரூ.18,37,300 திருடியதாகவும் தெரிவித்தார். இதையடுத்து தலைமறைவாக உள்ள வங்கி மேலாளரை போலீசார் தேடிவருகின்றனர்.