புதுடெல்லி,: ஆதார் வழக்கில் ஓரிரு நாளில் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மத்திய, மாநில அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கு ஆதார் அட்டையை மத்திய அரசு கட்டாயமாக்கியது. இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட 27 வழக்குகளை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, கடந்த பிப்ரவரி முதல் மே மாதம் வரை தொடர்ந்து நான்கு மாதங்களாக மொத்தம் 38 நாட்கள் விசாரித்தது. இதில், உச்ச நீதிமன்றத்தில் அதிக நாட்கள் விசாரிக்கப்பட்ட இரண்டாவது வழக்காக இந்த வழக்கு உள்ளது. ஆதாருக்கு எதிரான வழக்கில் மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், ராகேஷ் திவேதி, ஷியாம் திவான், அரவிந்த் தாதர் ஆகியோரும், மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலும் ஆஜராகி வாதாடினார்கள். இதில் குறிப்பாக மத்திய அரசு தரப்பு வாதத்தில், புதிய சிம்கார்டு பெறுவதற்கும், அரசின் சலுகைகளைப் பெறுவதற்கும் ஆதார் கார்டு கட்டாயம் தான் என்பதை நியாயப்படுத்தி வாதிடப்பட்டது. மேலும், ஆதார் மூலம் மக்களுக்கு அரசின் நிதி முறையாக பகிர்ந்தளிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.