திருமலை,: ஆந்திராவில் வீட்டில் இருப்பு வைத்திருந்த பட்டாசுகள் வெடித்ததில் வியாபாரி உட்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். ஆந்திராவின் ராஜமகேந்திரவரம் சுப்பாராவ் பேட்டையைச் சேர்ந்தவர் சூரியகண்டம், பட்டாசு வியாபாரி. இவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வியாபாரம் செய்ய அதிகளவில் பட்டாசுகளை வாங்கி தனது வீட்டில் இருப்பு வைத்திருந்தார். மேலும், வீட்டில் வெங்காய வெடியும் தயார் செய்து வந்துள்ளார்.
நேற்று அதிகாலை திடீரென வீட்டில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த மின்கசிவால் தீப்பிடித்து வீட்டில் வைத்திருந்த பட்டாசுகள் மீது தீப்பொறி பட்டு ஒரேநேரத்தில் வெடித்து சிதறத்தொடங்கின. எங்கும் புகை மண்டலம், நெருப்பு பிழம்பாக இருந்ததால் என்ன நடக்கிறது? என தெரியாத நிலையில் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். இதையறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து சிறிதுநேரத்தில் தீயை அணைத்தனர். வெடிவிபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே தொழிலாளி தனலட்சுமி உயிரிழந்தார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சூரியகண்டம், மற்றொரு தொழிலாளி வினய் ரெட்டி ஆகியோர் இறந்தனர். இவர்கள் அதே வீட்டில் தங்கியிருந்துள்ளனர். படுகாயமடைந்த மற்ற தொழிலாளிகளான முத்தியால்ரெட்டி, துர்காரெட்டி, வைஷ்ணவி ஆகியோர் சிகிச்சையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி