மன்னார்குடி: கருகும் சம்பா பயிரை காப்பாற்ற கடைமடை பகுதிக்கு தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி 9 கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கோட்டூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியம் புழுதிக்குடி, சோழங்கநல்லூர், அகரவயல் உள்ளிட்ட 9 கிராமங்களில் நேரடி நெல் விதைப்பின் மூலம் சுமார் 750 ஏக்கரில் விவசாயிகள் சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது, பயிர்கள் 60 நாட்களை கடந்துள்ளது. கோட்டூர் அருகில் ஓடும் முள்ளியாற்றில் இருந்து பிரியும் நீர், பொம்மை வாய்க்கால், பாப்பன் வாய்க்கால் ஆகிய இரு வாய்க்கால்கள், மேற்கண்ட 9 கிராமத்தின் வழியாக செல்கிறது. இந்த நீரை நம்பித்தான் 9 கிராமங்களிலும் சம்பா பயிரிடப்படுகிறது. இந்த வாய்க்கால்களில் 800 கன அடி நீர் திறந்து விட்டால் மட்டுமே கடைமடைகளுக்கு நீர் சென்று சேரும். ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வெறும் 300 கன அடி நீரை திறந்து விடுவதால் கடைமடைகளுக்கு நீர் செல்லவில்லை. இதனால் பயிர்கள் நீரின்றி காய்ந்து கருக தொடங்கி உள்ளது.