வேலூர்: தமிழகத்தில் உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாரல் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் ஏலம் விடப்படாமல் மண்ணோடு மண்ணாகி அரசுக்கு பலகோடி வருவாய் இழப்பு ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் ரேஷன் அரிசி கடத்தும் கும்பலையும் சேர்த்து கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களையும் பறிமுதல் செய்கின்றனர். இதில் லாரி, வேன், கார்கள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் என்று பல கோடி மதிப்பிலான வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. அதேபோல் டன் கணக்கில் ரேஷன் அரிசியையும் போலீசார் பறிமுதல் செய்கின்றனர். இதில் கடத்தல் ரேஷன் அரிசியினை அந்தந்த மாவட்டங்களில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்து விடுகின்றனர். அதேபோல் கடத்தல் வாகனங்களை பொறுத்தவரையில் பறிமுதல் செய்யும் வாகனங்கள் தொடர்பான விவரங்களை மாவட்ட வழங்கல் அலுவலருக்கு சமர்ப்பிக்கின்றனர். அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலருக்கு அனுப்பி வைக்கின்றனர். பின்னர், ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஆன்லைனில் ஏலம் விடுகின்றனர்.