நாகர்கோவில்: குஜராத் முதல் கன்னியாகுமரி வரை சரக்கு கப்பல் போக்குவரத்திற்கு புதிய பாதை அமைக்க மத்திய கப்பல் போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.கடல் போக்குவரத்து மிகப் பெரிய அளவில் சரக்குகளை கொண்டு செல்லவே உலகம் முழுவதும் பயன் படுகிறது. கப்பல் போக்குவரத்தின் மூலம் பெரும்பாலும் இரும்பு தாது, நிலக்கரி, பாக்சைட் தாது ஆகிய மூலப்பொருட்களும், பல வேதியல் மூலப்பொருட்களும், உரங்களும், பெட்ரோலியம் சார்ந்த எரிபொருட்களும் கொண்டு செல்லப்படுகின்றன.தமிழகம், கேரளா உள்ளிட்ட தென்னிந்திய கடல் பகுதிகளில் ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்கின்ற விசைப்படகுகளும், சரக்கு கப்பல்களும் அடிக்கடி மோதிக்கொள்வதும், விபத்துக்களும் உயிர் பலிகளும் ஏற்பட்டு வருகிறது. இதனால் தென் தமிழகம், கேரளா மாநில பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் ஆழ்கடலில் மீன்பிடித்தலில் உள்ள விசைப்படகுகளுடன் சரக்கு கப்பல்கள் மோதாமல் இருக்க சரக்கு கப்பல் போக்குவரத்திற்கென்று தனிப்பாதை உருவாக்க டைரக்டர் ஜெனரல் ஆப் ஷிப்பிங் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குஜராத் முதல் கன்னியாகுமரி வரை கடற்கரை பகுதியில் இருந்து 15 நாட்டிக்கல் மைல் தொலைவில் 20 நாட்டிக்கல் மைல் அகலத்தில் இந்த சரக்கு கப்பல் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முடிவு மீனவர்களை கடுமையாக பாதிக்கும் என்று மீனவர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 15 நாட்டிக்கல் மைல் தொலைவுக்குமேல் உள்ள 20 நாட்டிக்கல் மைல் பகுதி என்பது மேற்கு கடற்கரையில் மீனவர்கள் அதிகம் மீன்பிடிக்கின்ற பகுதி எனவும், இந்த வழியாக கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டால் நாளடைவில் இந்த பகுதிகளில் மீன்பிடி தொழிலை முற்றிலும் கைவிட வேண்டிய நிலை உருவாகும் என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுதொடர்பாக தேசிய மீன் தொழிலாளர் யூனியன் சார்பில் மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி உள்ளிட்டோருக்கு கடிதங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி