சென்னை: தமிழகத்தில் சாதி, மத வன்முறையை தூண்டும் எச்.ராஜா, கருணாஸை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். சமக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கட்சியின் நிறுவனத்தலைவர் ஆர்.சரத்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் உள்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.தொடர்ந்து சரத்குமார் அளித்த பேட்டி:நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதா? அல்லது தனித்து போட்டியிடுவதா? என்பது குறித்து உயர்மட்டக்குழு கூடி விரைவில் முடிவு செய்யும். உள்ளாட்சி தேர்தல் எப்போது வந்தாலும் நாங்கள் தனித்து போட்டியிடுவோம். சட்டமன்றத்துக்கும், நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என்ற திடீர் முடிவை ஏற்க முடியாது.தமிழகத்தில் சாதி, மத வன்முறையை தூண்டும் விதமாக பேசிய எச்.ராஜா, கருணாஸ் இருவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். பிரதமர் மோடி, எச்.ராஜா மீது கட்சி சார்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.