சென்னை: அதிமுக அரசின் ஊழல்களை திசை திருப்புவதற்காக காங்கிரஸ், திமுகவை கண்டித்து அதிமுக பொதுக்கூட்டங்கள் அறிவித்துள்ளனர் என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அதிமுக ஆட்சி மீது மக்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாத நிலையில் திமுக., காங்கிரசை கண்டித்து தமிழகம் முழுவதும் வரும் 25ம் தேதி பொதுக்கூட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் கோபத்திற்கும், வெறுப்பிற்கும் ஆளாகியுள்ள நிலையிலும், அதிமுக அரசின் ஊழல்களை மறைத்திடும் விதத்திலும் திசைத் திருப்புவதற்காக இத்தகைய பொதுக் கூட்டத்தை அதிமுக அறிவித்துள்ளது.
எதிர்கட்சிகளுக்கு எதிராக ஆளுங்கட்சி பொதுக் கூட்டம் நடத்துவது மிகுந்த வியப்பை தருகிறது. மத்தியில் காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சி நடந்தபோது இலங்கை ராணுவத்திற்கு இந்திய அரசு அளித்த உதவிகள் குறித்து முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியதை வைத்து அதிமுக பொதுக்கூட்டம் நடத்துவதாக கூறுகிறது. இலங்கையில் போர் நடந்த சூழலில் அதுகுறித்து கருத்து தெரிவித்த ஜெயலலிதா, ‘ஒரு போர் என்றுச் சொன்னால் அதிலே அப்பாவிகள் கொல்லப்படுவதும், பாதிக்கப்படுவதும் இயல்பானது தான்” என்று கூறியதை இன்றைய அதிமுகவினரால் மறுக்க முடியுமா?. இத்தகைய சந்தர்ப்பவாத பின்னணி கொண்ட அதிமுகவினர் காங்கிரஸ், திமுகவை குற்றம் சாட்டுவதற்கு எந்த அருகதையும் இல்லை.
அதிமுகவினர் பொதுக்கூட்டம் நடத்துவதன் மூலம் காங்கிரஸ், திமுக கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்று உள்நோக்கத்தோடு செயல்படுகின்றனர். அவர்களது நப்பாசை நிச்சயம் நிறைவேறாது. தமிழகத்தின் அரசியல் காற்று அதிமுகவுக்கு எதிராக வீச ஆரம்பித்துவிட்டது. இத்தகைய பொதுக்கூட்டங்கள் அதிமுக ஆட்சியை காப்பாற்றாது, மீண்டும் கொண்டு வராது.என்றார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி