சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள அறப்போர் இயக்கம் அலுவலகத்தில் மாநில தகவல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அறிக்கையை வெளியிட்டு அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் அளித்த பேட்டி: மாநில தகவல் ஆணையத்தில் தலைமை ஆணையர் ஷீலா பிரியா மற்றும் 6 ஆணையர்கள் உள்ளனர். இதில் ஒரு ஆணையர் ஒரு மாதத்துக்கு குறைந்தபட்சம் 200 மனுக்களை விசாரித்து பதில் அளிக்க வேண்டும். ஆனால், இந்த எண்ணிக்கை 2014ம் ஆண்டு 165, 2015ம் ஆண்டு 163, 2016ம் ஆண்டு 107, 2017ம் ஆண்டு 91 என படிப்படியாக குறைந்தது. இது இந்தாண்டு ஜூன் வரையில் 48 ஆக குறைந்துள்ளது. இதனால், 2016ம் ஆண்டு முடிவில் விசாரணைக்காக காத்திருக்கும் மனுக்களின் எண்ணிக்கை 1,135, 2017ம் ஆண்டில் 5,220 ஆகவும் அதிகரித்துள்ளது.