புதுடெல்லி: நாடு முழுவதும் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 4.5 லட்சம் குற்றவாளிகளின் விவரங்கள் அடங்கிய தேசிய ஆவண இணையதளத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் குற்றங்களில் ஈடுபட்டவர்களின் தகவல்கள் தொகுக்கப்பட்டு, தேசிய குற்ற ஆவண காப்பகத்தில் பாதுகாக்கப்படுகிறது. இதன்மூலம், நாட்டின் எந்த பகுதிகளில் குற்றம் நடந்தாலும் இந்த காப்பகத்தில் உள்ள குற்றவாளிகள் பற்றிய ஆவணங்களை பெற்று ஆய்வு செய்ய முடியும். இதேபோல், தற்போது பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு தண்டனை பெற்றவர்களின் விவரங்களும் தொகுக்கப்பட்டு, புதிய ஆவண இணையதளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதில், இந்த குற்றங்களுக்காக தண்டனை பெற்ற 4.5 லட்சம் பேரின் தகவல்கள், 3.5 லட்சம் குற்றவாளிகளின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.