புதுடெல்லி: கருப்பு பண மீட்பு நடவடிக்கையில் 2வது கட்டமாக கம்பெனிகள் பதிவில் இருந்து 55,000 நிறுவனங்களை நீக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கருப்பு பணத்தை மீட்டும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. 2016 நவம்பர் 8ம் தேதி பண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு பழைய 500 மற்றும் 1,000 நோட்டை வங்கிகளில் மாற்ற அவகாசம் தரப்பட்டது. ஜன்தன் மற்றும் நீண்டகாலமாக பரிவர்த்தனை இல்லாத கணக்குகளில் அதிக தொகை டெபாசிட் செய்வது கண்காணிக்கப்பட்டது. இதுபோல், போலி நிறுவனங்கள் மூலம் கருப்பு பணம் மாற்றப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு நிறுவனம் தொடர்ந்து செயல்படாமல் இருந்தாலோ, 2 ஆண்டுக்கு மேல் கணக்கு தாக்கல் செய்யாமல் இருந்தாலோ, கம்பெனிகள் பதிவேட்டில் இருந்து அவற்றின் பதிவு ரத்து செய்யப்படும். இத்தகைய நிறுவனங்கள் சட்ட விரோத பண பரிமாற்றங்களுக்கு உதவிகரமாக உள்ளன. இதன்படி நீண்ட காலம் செயல்படாத, கணக்கு தாக்கல் செய்யாத 2.26 லட்சம் நிறுவனங்களை கம்பெனி விவகார அமைச்சகம் நீக்கி நடவடிக்கை எடுத்திருந்தது.