மாஸ்கோ: ரஷ்யாவிடம் ராணுவ ஆயுதங்களை கொள்முதல் செய்ததால் முதல் முறையாக சீனாவுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ள விவகாரம் பரபரப்பாகி உள்ளது. இதற்கான விளைவுகள் மிக பயங்கரமாக இருக்கும் என ரஷ்யாவும், சீனாவும் கூட்டாக இணைந்து அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. ‘நெருப்போடு விளையாடாதே’ என ரஷ்யா கடுமையாக எச்சரித்துள்ளது.
உக்ரைனில் ரஷ்யாவின் நடவடிக்கைகள் மற்றும் அமெரிக்க தேர்தலில் தலையீடு ஆகியவற்றால் ரஷ்யா மீது அதிபர் டிரம்ப் நிர்வாகம் சில தடைகளை விதித்துள்ளது. அதோடு, ரஷ்யாவை குறிவைத்து அந்நாட்டுடன் ராணுவ ஆயுத கொள்முதலில் ஈடுபடும் நாடுகளையும், எதிரியாக கருதி பொருளாதார தடை மூலம் பதிலடி கொடுக்கும் சட்டமும் (சிஏஏடிஎஸ்ஏ) கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவரை இந்த சட்டத்தின் மூலம் ரஷ்யா, ஈரான், வடகொரியா ஆகிய நாடுகள் மீது மட்டுமே அமெரிக்கா தடைகளை விதித்திருந்தது. இந்நிலையில், ரஷ்யாவிடமிருந்து போர் விமானங்களை வாங்கியதற்காக சீனாவுக்கு முதல் முறையாக அமெரிக்கா தடை விதித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யாவிடமிருந்து சீனா மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், சீன ராணுவத்தின் இடிடி நிறுவனம் 10 ரஷ்ய சுகாய் சு-35, எஸ்-400 வகை ஏவுகணைகளையும் வாங்கியுள்ளது. இதன் காரணமாக, இடிடி நிறுவனத்தின் மீதும், அதன் இயக்குநர் லி சாங்பு மீதும் சிஏஏடிஎஸ்ஏ சட்டத்தின் கீழ் அமெரிக்கா தடை விதித்துள்ளது.இந்த தடையால் ரஷ்யாவும் சீனாவும் அமெரிக்கா மீதும் கடும் ஆத்திரமடைந்துள்ளன. ரஷ்யாவின் வெளியுறவு துணை அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் விடுத்துள்ள அறிக்கையில், ‘ரஷ்யா-அமெரிக்கா உறவில் அழுத்தங்களை தூண்டிவிடும்போது, அவர்கள் மறந்து போன உலகளாவிய நிலைத்தன்மை கொள்கையை நினைவுபடுத்திக் கொள்வது நல்லது. நெருப்புடன் விளையாடுவது சிறுபிள்ளைத்தனமானது. அது மிகப்பெரிய பயங்கரத்தில் முடியும். இதுபோன்ற எத்தனை தடைகள் விதித்து அழுத்தம் தந்தாலும், ரஷ்யாவை அதன் பாதையை விட்டு விலக வைக்க முடியாது’ என கூறி உள்ளார். இந்த தடை குறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், ‘‘இந்த தடை முழுக்க முழுக்க ரஷ்யாவை மட்டுமே குறிவைத்து இருப்பது. மற்றபடி வேறெந்த நாட்டின் ராணுவ பலத்தையும் குறைக்க வேண்டுமென்ற உள்நோக்கம் எங்களுக்கு இல்லை. அதே நேரத்தில் ரஷ்யாவுடன் ராணுவ உறவு வைத்துக் கொண்டதற்கான விலையை சம்மந்தப்பட்ட நாடுகள் தந்தே ஆக வேண்டும். அது சீனா என்றில்லை. எந்த நாடாக இருந்தாலும் தடை விதிப்பதில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது’’ என்றனர்.