புதுடெல்லி: இந்தியாவை உயர் நடுத்தர வருவாய் நாடாக உயர்த்துவதற்காக 3,000 கோடி டாலர் நிதியுதவி அளிக்க உலக வங்கி முடிவு செய்துள்ளது. பண மதிப்பு நீக்கத்தை தொடர்ந்து தொழில்துறை உற்பத்தியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், பல லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதற்கிடையில், இந்தியாவின் தர நிலையை உயர்த்த நிதி உதவி வழங்குவதற்கு உலக வங்கி முன்வந்துள்ளது. இதன்படி இந்தியா குறைந்த நடுத்த வருவாய் பிரிவில் இருந்து உயர் நடுத்தர பிரிவு கொண்ட நாடாக உயர்த்த நாடுகள் பங்குதாரர் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்புகள் உருவாக்குதல் போன்றவற்றுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும்.
இதற்காக 2,500 முதல் 3,000 கோடி டாலர் (1.8 லட்சம் கோடி முதல் 2.16 லட்சம் கோடி) நிதியுதவி அளிக்கப்பட உள்ளது. இந்த நிதி உலக வங்கி அமைப்புகளான மறு கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான சர்வதேச வங்கி, சர்வதேச நிதிக்கழகம் மற்றும் முதலீட்டு பொறுப்புறுதி கழகம் ஆகியவை வழங்க உள்ளன. இதுகுறித்து உலக வங்கியின் தெற்காசிய துணை தலைவர் ஹர்ட்விங் ஸ்காபர் கூறுகையில், ‘‘உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடான இந்தியா, கடந்த ஆண்டுகளில் ஏராளமானோரை வறுமை நிலையில் இருந்து வெளியே கொண்டு வந்துள்ளது. 2030ம் ஆண்டில் உயர் நடுத்த வருவாய் பிரிவு நாடாக இந்தியா உருமாறும்’’ என்றார். பொருளாதார விவகார செயலாளர் சுபாஷ் சந்த்ர கார்க் கூறுகையில், இந்தியாவின் நிலைத்த, நீடித்த வளர்ச்சிக்காக நாடுகள் பங்குதாரர் கூட்டமைப்பில் இணைத்தமைக்காக உலக வங்கி குழுமத்துக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி