குன்னூர்: நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு வகையிலான அரிய வகை விலங்குகள், பறவைகள் மற்றும் தாவரங்கள் உள்ளது. இந்நிலையில் முதல் முறையாக வவ்வால், அதிகளவில் குன்னூர் பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளதால், சுற்றுச்சுழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதில் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் பகுதியில் உள்ள மரங்களில் ஆயிரம் முதல் இரண்டாயிரம் வவ்வால்கள் தஞ்சமடைந்துள்ளது. இது குறித்து சுற்றுச்சுழல் ஆர்வலர் நந்தக்குமார் கூறுகையில் கேரள மாநிலத்தில் இந்த ஆண்டு வரலாறு காணாத அளவில் மழை பெய்து பேரிடர் ஏற்பட்டதால், அங்கிருந்து வவ்வால்கள் இடம்பெயர்ந்து மலை பிரதேசமான குன்னூருக்கு வந்துள்ளது.
ஓரிரு வவ்வால்கள் மட்டுமே சுற்றி திரிந்த நிலையில் தற்போது ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட வவ்வால்கள் மரங்களில் தஞ்சம் புகுந்துள்ளது. இது போல் வவ்வால்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் நிபா வைரஸ் முலம் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வவ்வால்களின் வருகை அதிகரித்து இருப்பதால் அவை பழங்களை சாப்பிட்டு, அதன் எச்சத்தின் முலமாக புதிதாக பழமரக்கன்றுகள் அதிகளவில் வளர அதிக வாய்ப்பிருந்தாலும், மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் முன்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி