திருச்சியில் 2 கோடி கேட்டு துணிகரம் ரவுடி கும்பலால் கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் மீட்பு: செ5 பேர் கைது, சென்னை ரவுடி உட்பட 3 பேரிடம் விசாரணை

திருச்சி: திருச்சி கே.கே.நகர் இந்தியன்வங்கி காலனியை சேர்ந்தவர் தனபால்(58). ரியல் எஸ்டேட் அதிபர். கடந்த 18ம் தேதி மாலை வீட்டிலிருந்து இருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து தனபாலின் அண்ணன் மணி கே.கே.நகர் போலீசில் புகார் கொடுத்தார்.  தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில் கே.கே.நகர் மன்னார்புரம் வளைவு அருகே வந்த வெள்ளை நிற ஸ்கோடா காரை மடக்கி பிடித்து சோதனை நடத்திய போது 3 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் தனபாலை கடத்திய கும்பல் நேற்று முன்தினம் நள்ளிரவு திருச்சி வழியாக தஞ்சை நோக்கி காரில் சென்று கொண்டிருப்பது தெரிய வந்தது.

அந்த காரை திருவெறும்பூர் அடுத்த காட்டூர் பாப்பாக்குறிச்சி அருகே தனிப்படை போலீசார் மடக்கினர். காருக்குள் இருந்த 5 பேரை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தனர். ஆனால் காருக்குள் கடத்தப்பட்ட தனபால் இல்லை. அந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது.

ஏற்கனவே பிடிபட்ட 3 பேர் உள்பட 5 பேரிடம் தனிப்படை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இதில் கடத்தப்பட்ட தனபால் ஓலையூர் காட்டுப்பகுதியில் கட்டி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. நேற்று தனிப்படையினர் அங்கு சென்று தனபாலை மீட்டு  வந்தனர். இதுகுறித்து போலீசார் தெரிவித்ததாவது: தனபாலிடம் அதிகளவில் பணம் புழங்கியதை தெரிந்து கொண்ட சென்னையை சேர்ந்த ரவுடி பூமிநாதன், தனபாலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு 2 கோடி கேட்டு மிரட்டியுள்ளார். அவர் பணம் தர மறுத்ததால் திருச்சி காட்டூரை சேர்ந்த ரவுடியான தமிழ்(30) உதவியை நாடியுள்ளார். பின்னர் சென்னையிலிருந்து பூமிநாதன் கடந்த ஒரு வாரத்திற்கு முன் திருச்சி வந்து, தமிழ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 5 பேருடன் சேர்ந்து, கடந்த 18ம்தேதி இரவு டிவிஎஸ் டோல்கேட்டிற்கு வந்த தனபாலை காரில் கடத்திச் சென்று 2 கோடி கேட்டு மிரட்டியுள்ளனர் என்றனர்.

இதுகுறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிந்து தனபாலன் நண்பர் முத்துசெல்வம் (45), உறையூரை சேர்ந்த ரத்னகுமார் (32, அருண்குமார் (28), சென்னையை சேர்ந்த ப்ரதீப்சரன் (32), அரும்பாவூரை சேர்ந்த வீரமணி (29) ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் ரவுடிகளான சென்னையை சேர்ந்த  பூமிநாதன் (39), காட்டூரை சேர்ந்த தமிழ் (35), அவரது தம்பி தென்னரசு (30) ஆகிய 3 பேரை ரகசிய இடத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: