சென்னை: திருமணமான 20 நாளில், புதுப்பெண் நகை, பணத்துடன் மாயமானார். அவரை, போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை கொண்டித்தோப்பு பாஷ்யகாரன் தெருவை சேர்ந்தவர் ஆனந்த் ஜெயின் (43). தங்க நகை வியாபாரி. இவருக்கும் புனேயை சேர்ந்த ஜெய (28) என்ற பெண்ணுக்கும் உறவினர்கள் சம்மதத்துடன் கடந்த மாதம் 15ம் தேதி, பாரிமுனை என்எஸ்சி போஸ் ரோட்டில் உள்ள குமரக்கோட்டம் கோயிலில் திருமணம் நடந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் ஆனந்த் ஜெயின் வியாபாரம் சம்பந்தமாக வெளியே சென்றார். அவரது பெற்றோர் மற்றும் ஜெய வீட்டில் இருந்தனர். மதியம், அனைவரும் தூங்கினர். மாலையில் பெற்றோர் எழுந்து பார்த்தபோது, ஜெயயை காணாமல், திடுக்கிட்டனர். இதையடுத்து, ஆனந்த் ஜெயினுக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி ஆனந்த் ஜெயின் வீட்டுக்கு வந்தார். பின்னர், பல இடங்களில் ஜெயயை தேடியும், அவரை பற்றி எந்த தகவலும் இல்லை. இதையடுத்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த ₹20 ஆயிரம், ₹3 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், தனது உடைகளை பையில் போட்டு கொண்டு சென்றுவிட்டார் என தெரிந்தது.
வேளச்சேரி நேருநகர் மதியழகன் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி (44). இவரது வீட்டில் 4 குடும்பம் வாடகைக்கு வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் மூர்த்தி வீட்டு நாய் குரைத்தது. உடனடியாக மூர்த்தி கதவை திறந்து வெளியில் வர முயன்றார். ஆனால் கதவை திறக்க முடியாத அளவுக்கு வெளிப்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. இச்சம்பவம் குறித்து வேளச்சேரி போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வேளச்சேரி ரோந்து போலீசார் விரைந்து வந்து, கதவை திறந்து விட்டனர். இதையடுத்து போலீசார் அங்கிருந்த சி.சி.டி.வி கேமராவை ஆய்வு செய்தபோது, அரைக்கால் டவுசர் அணிந்து ஒரு வாலிபர் பைக்கில் ஏறி மதில்சுவர் ஏறி குதிக்கிறார். பின்னர், அந்த வீட்டை வெளிப்புறம் தாழ்ப்பாள் போட்டுட்டு முதல் மாடிக்கு சென்று, தனது செல்போனில் உள்ள டார்ச் லைட் மூலம் பார்க்கிறான். இதைப்பார்த்து நாய் குரைப்பதால் மேலே உள்ள 2 வீடுகளின் கதவை தாழ்ப்பாளை போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடுவது தெரிந்தது. திருவான்மியூர், வெட்டுவாங்கேணி, முதல் குறுக்கு தெருவை சேர்ந்த ப்ரிட் (28) என்பவரின் காரை உடைத்து, ஒரு லேப்டாப், ₹40 ஆயிரம் மதிப்பிலான இலங்கை கரன்சி, 3 கிரடிட் கார்டு ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர்.
மேடவாக்கத்தை சேர்ந்தவர் யுவராஜ் (27). சாப்ட்வேர் இன்ஜினியர். இவரது நண்பர் தர்மபுரியை சேர்ந்த சிவசங்கர் (28). தர்மபுரியில் சொந்தமாக அரிசி மண்டி வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு இருவரும் பைக்கில் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பினர். பெரும்பாக்கம் தனியார் மருத்துவமனை அருகே வந்தபோது சாலை பள்ளத்தில் பைக் இறங்கியபோது நிலை தடுமாறி இருவரும் தூக்கிவீசப்பட்டனர். இதில் சிவசங்கர் பரிதாபமாக பலியானார். யுவராஜ் படுகாயமடைந்தார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி