காங்கயம்: ‘‘அரசியல் நமக்கு தொழில் அல்ல, மக்கள் நீதி மய்ய பொறுப்பாளர்கள், தொண்டர்கள் முழுநேர அரசியலில் ஈடுபட வேண்டாம்’’ என கமல்ஹாசன் அறிவுறுத்தினார். திருப்பூர் மாவட்டம், காங்கயம் பேருந்து நிலையத்தில் நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது: விவசாயம், போக்குவரத்து, உள்கட்டமைப்பு வசதி போன்றவை உங்களுக்கு இருக்கிறதா? அவை இருந்தாலே பாதி விவசாயம் வென்றுவிடும் உங்கள் கிராம சபைகள், அவைகளில் உங்கள் பங்கீடு பலமாக இருக்க வேண்டும். மக்கள் நீதி மய்யத்தின் பங்கீடு மட்டும் மல்ல, மக்களின் பங்கீடும் தேவை. திருவிழா போல கிராம சபைகளை நடத்த வேண்டும். அங்கே எழுப்பப்படும் கேள்வி எந்த கோர்ட்டையும் அதிரவைக்கும். நீங்க அரசியலில் முழுநேரமாக ஈடுபட வேண்டியதுதானே, ஏன் நடுவுல டிவி நிகழ்ச்சி பண்றீங்க எனக் கேட்கிறார்கள். அவரவருக்கு தொழில் வேண்டும், அரசியல் தொழிலாக இருக்கக்கூடாது. அரசியல் தொழிலாக ஆனதால் தான் பலபேர் அதையே வியாபாரமாக செய்து கொண்டிருக்கிறார்கள். நமக்கு அரசியல் தொழில் அல்ல, நாட்டுக்கு நாம் செய்யப்போகும் கடமை. நான் இந்த மேடையில் இருப்பவர்களிடமும் சொல்லிக் கொள்கிறேன், முழுநேரமும் அரசியல் செய்ய வருகிறேன் என்கிறீர்கள்.