போலீஸ் ஸ்டேஷன் முன் தீக்குளித்த பெண் : நாமக்கல் அருகே பரபரப்பு

குமாரபாளையம்: நாமக்கல் அருகே குமாரபாளையம் காவல் நிலையம் முன்பு, ஒரு கோடியே 30 லட்சம் ரூபாயை தராமல் ஏமாற்றி, மோசடியில் ஈடுபட்ட கள்ளக்காதலனை கைது செய்யாத போலீசாரை கண்டித்து, பெண் தீக்குளித்தார்.நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்த ஓலப்பாளையத்தை சேர்ந்தவர் பார்வதி (46). கோவை பீளமேட்டில் ஜவுளி வியாபாரம் செய்து வரும் இவர், கணவர் சேகர் மற்றும் மகன், மகளுடன் வசித்து வந்தார். இவருக்கு தனது கார் டிரைவர் குமாரபாளையம் ராஜராஜன் நகரைச்சேர்ந்த ஈஸ்வரனுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதை சேகர் கண்டிக்கவே, கணவரை பிரிந்த பார்வதி, மகனுடன் குமாரபாளையத்தில் தனி வீட்டில் வசித்து வந்தார். டிரைவர் ஈஸ்வரனுக்கு மலர்க்கொடி என்ற மனைவி இருந்த போதிலும், அவர் அடிக்கடி பார்வதியின் வீட்டில் தங்கி வந்துள்ளார். அப்போது பார்வதி துணி வியாபாரம் செய்தபோது கிடைத்த பணத்தை ஈஸ்வரனுக்கு கொடுத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்கள் முன்பு இருவருக்கும் மனகசப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஈஸ்வரன் பெயரில் இருந்த 48 சென்ட் நிலத்தை, பார்வதி தனது பெயருக்கு எழுதிக்கொடுக்கும்படி வற்புறுத்தி உள்ளார். இதில் 34 சென்ட் நிலத்தை பார்வதியின் பெயரில் அவர் எழுதிக்கொடுத்து உள்ளார். மீதியுள்ள 14 சென்ட் நிலத்தையும் எழுதி கொடுக்கும்படி பார்வதி தகராறு செய்துள்ளார். இந்நிலையில் கடந்த 3 மாதத்துக்கு முன் குமாரபாளையம் காவல் நிலையம் வந்த பார்வதி, தன்னிடமிருந்து பணம், நகை உள்ளிட்ட ₹1.30 கோடி சொத்துகளை ஈஸ்வரன் வாங்கி ஏமாற்றி மோசடி செய்துள்ளார். அந்த பணத்தை திருப்பி கேட்டால், ஈஸ்வரன் அவரது அண்ணன் சம்பு, மனைவி மலர்க்கொடி ஆகியோர் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாக புகார் கொடுத்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து குமாரபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை 4.30 மணியளவில் குமாரபாளையம் காவல் நிலையத்திற்கு வந்த பார்வதி, ஈஸ்வரனை கைது செய்யாத போலீசாரை கண்டித்து தீக்குளிப்பதாக தெரிவித்தார். திடீரென கண் இமைக்கும் நேரத்தில், அவர் கேனில் கொண்டு வந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அக்கம் பக்கத்தவர்கள் ஓடிவந்து தீயை அணைத்தனர். படுகாயமடைந்த பார்வதி, ஈரோடு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: