புழல் சிறை கைதிகள் அறையில் மீண்டும் அதிரடி : 2 டி.வி.க்கள், 20 கிலோ பிரியாணி அரிசி பறிமுதல்

சென்னை:  சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்வது போன்ற புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, புழல் சிறையில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் கைதிகள் அறையில் இருந்து 18 டிவிகள், 3 ரேடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 17 காவலர்கள் மற்றும் 5 கைதிகள் பல்வேறு சிறைகளுக்கு உடனே இட மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று மாலை புழல் தண்டனை சிறையில் சிறைத்துறை அதிகாரிகள் புகுந்து சோதனை நடத்த முடிவு செய்தனர். அப்போது இந்து இயக்க தலைவர்களை கொலை செய்ய முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ள லால்மாலிக், பன்னா இஸ்மாயில் அறைக்குள் சோதனை செய்ய முன்றனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் திடீர் சோதனைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அவர்கள், ‘‘மற்ற அறைகளில் சோதனைகள் செய்துவிட்டு எங்களது அறையை சோதனை செய்யுங்கள்’’ என்றனர். இதனால் கைதிகளுக்கும் போலீசாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அதிரடியாக அறையில் புகுந்து பார்த்தபோது 2 பெரிய டிவிக்கள், 20 கிலோ பிரியாணி அரிசி, 5 கிலோ பருப்பு, 2 கிலோ காய்கறிகள், பாடி ஸ்பிரே மற்றும் சமையல் பாத்திரங்கள் இருப்பது தெரியவந்தது. உடனே அவற்றை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும், பழைய பொருட்கள் வைக்கும் அறையில் வைக்கப்பட்டு உள்ளன. சோதனை தொடர்ந்து நடக்கும் என்று சிறைத்துறை வட்டாரம் தெரிவித்தது. இதுதொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: