* தடை விதிக்கக்கோரி ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு * விரைவில் விசாரணைக்கு வருகிறது
சென்னை: சென்னை பள்ளிக்கரணையில் உள்ள சதுப்பு நிலத்தின் மீது ₹1350 கோடி அடமானம் கடன் வழங்க தடை விதிக்க வேண்டும் எனக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தெடரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது. சென்னை கொடுங்கையூரை சேர்ந்த கலாமின் அக்கினி சிறகுகள் அறக்கட்டளை செயலாளர் செந்தில் குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை பள்ளிக்கரணை பல ஏக்கல் நிலம் அடங்கிய சதுப்பு நிலம் உள்ளது. இந்த சதுப்பு நிலத்தில் ஏராளமான பறவை இனங்கள், மீன் இனங்கள், மற்றும் தாவர இனங்கள் உள்ளன. சென்னை புறநகர் பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ள இந்த சதுப்பு நிலத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும், குப்பைகளையும் சதுப்பு நிலத்தில் கொட்டுகிறார்கள். இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், பள்ளிக்கரணையில் உள்ள சதுப்பு நிலத்தில் சுமார் 20 ஏக்கர் (7.64 ஹெக்டேர்) நிலத்தை ஐ.ஜி- 3 இன்போ என்ற தனியார் நிறுவனம் விதிகளுக்கு முரணாக ஆக்கிரமிப்பு செய்து அந்த நிலத்தை அடமானமாக வைத்து தனியார் வங்கியில் ₹1,350 கோடி கடன் பெற முயற்சித்து வருகிறது. இதற்காக அடமான பத்திரம் பதிவு செய்வதற்காக சைதாப்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் ஆவணங்கள் நிலுவையில் உள்ளன. வனத்துறைக்கு சொந்தமான இந்த சதுப்பு நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த நிலத்திற்கு அடமான பத்திரத்தை பதிவு செய்ய சார் பதிவாளருக்கு தடை விதிக்க வேண்டும். இந்த நிலத்திற்கு அடமானமாக கடன் வழங்க வங்கிக்கு தடை விதிக்க வேண்டும். இந்த மோசடி குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி