புதுடெல்லி: கேரளாவில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பிட மத்திய குழு இன்று வருகை தருகிறது. கேரளாவில் 14 மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பேரழிவு ஏற்பட்டது. மழை வெள்ளம் காரணமாக 488 பேர் உயிரிழந்தனர். பிரதமர் மோடி வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு, கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி ரூ.500 கோடி நிதியுதவி வழங்கினார். இந்நிலையில், கேரளா அரசு வெள்ள பாதிப்பு தொடர்பான நினைவூட்டலை மத்திய அரசுக்கு அனுப்பியது. அந்த மனுவில் வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை, சொத்துகள் இழப்பு, கட்டமைப்பு மற்றும் விவசாய பயிர்களின் சேத விவரங்களை முழுமையாக குறிப்பிட்டு இருந்தது.