×

அமைச்சர் வீட்டு வாசலில் நின்று மேலாளரை மிரட்டிய பெண் கைது: மன்னார்குடியில் பரபரப்பு

மன்னார்குடி: மன்னார்குடியில் அமைச்சர் காமராஜின் வீட்டு வாசலில் நின்று அவரது மேலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வடக்குவீதியில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வீடு உள்ளது. அமைச்சரின் வீட்டில் அரிபிரசாத் (28) என்பவர் கடந்த 4 ஆண்டுகளாக மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் அமைச்சர் காமராஜ் இருந்தார். அவரை பார்ப்பதற்காக வீட்டுக்கு வெளியே கட்சியினர் காத்திருந்தனர். அப்போது மன்னார்குடி மேல இரண்டாம் தெருவை சேர்ந்த சரவணன் மனைவி ராணி (40) என்பவர் அமைச்சர் வீட்டின் அருகில் நின்று கொண்டு அங்கு கூடியிருந்த கட்சிக்காரர்களை தகாத வார்த்தைகளில் திட்டினார். தகவலின்பேரில் அமைச்சர் வீட்டுக்கு வந்து ராணியை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர்.

இதுகுறித்து மன்னார்குடி காவல் நிலையத்தில் அரி பிரசாத் புகார் செய்தார்.  இதுகுறித்து அவரிடம் கேட்டபோது என்னை ராணி செருப்பால் அடித்து விட்டு அருகில் கிடந்த கல்லை எடுத்து தன்னை தாக்கியதோடு கொலை மிரட்டல் விடுத்தார் என்று தெரிவித்தார்
இந்த புகாரின்பேரில் மன்னார்குடி போலீசார் 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிந்து ராணியை கைது செய்தனர். பின்னர் மன்னார்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ராணியை ஆஜர்படுத்தினர். அப்போது ராணியை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து திருவாரூர் மகளிர் கிளை சிறையில் ராணி அடைக்கப்பட்டார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : woman arrested ,doorstep, threatened, Mannargudi
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...