கர்ப்பத்தில் நான்காவதும் பெண் குழந்தை வீட்டில் வைத்து நர்ஸ் செய்த கருக்கலைப்பில் பெண் சாவு

* உறவினர்கள் முற்றுகை; மறியல்

* உசிலம்பட்டி அருகே பரபரப்பு

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே 4வது முறையாக கர்ப்பத்தில் பெண் குழந்தை என தெரிந்ததால், தனது வீட்டில் வைத்து நர்ஸ் கருக்கலைப்பு செய்தபோது தாய் பலியானார். ஆத்திரமடைந்த உறவினர்கள் நர்ஸ் வீட்டை  முற்றுகையிட்டு, மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம், எழுமலை அருகே உத்தப்புரத்தை சேர்ந்தவர் ராமர். இவரது மனைவி ராமுத்தாய் (28). இவர்களுக்கு அழகு சித்ரா(9), பிரவீணா (6), அழகுலட்சுமி (3) என 3 பெண் குழந்தைகள் உள்ளனர். 4வது முறையாகவும்  ராமுத்தாய் கர்ப்பம் தரித்தார். ஸ்கேன் செய்து பார்த்ததில்,அதுவும் பெண் குழந்தை என்பது குடும்பத்தினருக்கு தெரிய வந்தது. இதனால் கருக்கலைப்பு செய்ய தனியார் மருத்துவமனையை அணுகியுள்ளனர். 7 மாதங்கள் ஆகிவிட்டதால், கருக்கலைப்பு செய்ய முடியாது என டாக்டர்கள் கூறி விட்டனர். இதனால் ராமுத்தாய் மற்றும் குடும்பத்தினர்  கவலையில் இருந்துள்ளனர்.

இதையடுத்து, தொட்டப்பநாயக்கனூரை சேர்ந்த பாண்டி மனைவி லெட்சுமியை அணுகினர். இவர் உசிலம்பட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். அவரிடம் ராமுத்தாய் அணுகி, 4வதும்  பெண் குழந்தையாக இருப்பதால், கருக்கலைப்பு செய்ய முடியுமா என கேட்டுள்ளார். அதற்கு லெட்சுமி, தொட்டப்பநாயக்கனூரில் உள்ள தனது வீட்டில் வைத்து கருக்கலைப்பு செய்வதாக கூறி அழைத்து சென்றார். எந்த மருத்துவ  வசதியுமின்றி, தவறான முறையில் கருக்கலைப்பு செய்ததில், ராமுத்தாய் பரிதாபமாக இறந்தார்.தகவலறிந்த ராமுத்தாயின் உறவினர்கள் நேற்று மதியம் 3 மணியளவில் லெட்சுமி வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். தொடர்ந்து சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

தகவலறிந்து உசிலம்பட்டி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். இறந்த ராமுத்தாயின் உடலை ஏற்ற வந்த ஆம்புலன்சை வழி மறித்து, லெட்சுமியை கைது செய்யக்கோரி உறவினர்கள் தொடர் போராட்டத்தில்  ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த உசிலம்பட்டி தாலுகா போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததன் பேரில், ராமுத்தாய் உடல் பிரேத  பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் ெலட்சுமியை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடை இருக்கும் நிலையில் லெட்சுமி வேறு யாருக்கும் இதேபோன்று  கருக்கலைப்பில் ஈடுபட்டாரா? இதில் யாரும் இறந்துள்ளனரா? என்பது குறித்த விசாரணையை போலீசார் வேகப்படுத்தியுள்ளனர்.  இச்சம்பவம்அங்கு பரபர ப்பை ஏற்படுத்தியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: