தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட இடங்களில் மத்திய தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தனர். ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில், தாமிரபரணி நதிக்கரையோரம் சிவகளை பகுதியில் ஏராளமான மண் தாழிகள் புதைந்து கிடந்தன. பழங்காலத்தில் மனிதன் வாழ்ந்ததற்கான அடையாளமாக ஏராளமான மண்தாழிகள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டன. இப்பகுதியில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பல இடங்களில் முதுமக்கள் மண் தாழிகள் வெளியில் தென்படுகிறது. ஆங்காங்கே புதைந்து கிடக்கும் மண் தாழிகளில் எலும்புகளும், அதன் அருகில் குதிரையின் லாடங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிவகளை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த வேண்டும் கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனர்.